(வாக்குமூலம்) Confession

By Admin - 25 May 2024 791 0

மூக்கடைத்து மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருதேன். படுத்தும் தூக்கம் வரவில்லை. என்ன செய்வதென்று யோசிக்கையில் சரி எப்பொழுது போல கதை எழுதலாம் என்று வந்து கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தேன். என்ன எழுதுவது யாரை பற்றி எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். யோசனை மெதுவாக நகர்ந்து மொபைல் பக்கம் சென்றது. மொபைலை எடுத்து இன்ஸ்டாகிராம் நோண்ட ஆரம்பித்தேன். நொண்டியதில் கடைசியாக அவள் நவம்பர் 7 ஆம் தேதி எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள் இல்லை நான் தான் மானம் கெட்டு அவளுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தேன். மானம் கெட்டு என்று நான் சொல்வதால் நீங்கள் என்னை மேல் ஷாவ்வனஸ்டிக் பிக் என்று கூட நினைத்துக் கொள்ளலாம் ஆனால் நான் உண்மையில் ஒரு சுயநல பெமினிஸ்ட். 

அதன் பிறகு இன்று வரை அவளுக்கு மறுபடியும் நான் மெசேஜ் அனுப்பவில்லை. அதற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை, ஒரு புதிய புரிதல் வந்து விட்டது. அந்த புரிதல் தேவை சம்மந்தப்பட்டது! இப்பொழுது அவளுக்கு நான் தேவை இல்லை என்று நினைக்கிறேன், என் தேவை வரும் பொழுது அவளாகவே என்னை நாடி வந்தாலும் வருவாள் இல்லை இதை படித்து விட்டு வராமலும் போகலாம். என்ன இருந்தாலும் அவளும் பெண் தானே! இங்கே தான் நான் சொன்ன அந்த சுயநல பெமினிஸ்ஸத்தின் வெளிப்பாடு என்னிடம் வெளிப்படுகின்றது.

நான் கடைசியாக மெசேஜ் அனுப்பிய பொழுது அவள் என்னை நடத்திய விதம் கொஞ்சம் மோசமானதாக இருந்தது. நானும் மானம் கெட்டு பரவாயில்ல சரியாகிவிடும் என்றென்னினேன் காரணம் இவளை விட்டால் எனக்கு உள்ளூர மனம் திறந்து பேச யாருமில்லை! அதனால் அவள் என்னை அசிங்கப்படுத்துவது தெரிந்தும் நான் அவள் மீது கொண்ட உண்மையான அன்பு, இல்லை உண்மையான காதல், இல்லை இல்லை உண்மையான காமம் இதில் எது உண்மையென்று எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை! 

சரி மானம் கெட்டு இப்பொழுது மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்று யோசிக்கையில் என் நினைவுகள் என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது அங்கும் ஒருவள் இருந்தாள், அவள் என்னை யூஸ் செய்து என்னை காயப்படுத்தினாள் என்று என்னை நான் ஞாயப்படுத்திக்கொண்டாலும் உண்மையில் நான் முட்டாள்தனமாக நடந்துகொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இதில்  ஒன்று மட்டும் ஒப்பில்லா உண்மை நான் மனநிலை பாதிக்கப்பட்டு இதனால் மனப்புண் அடைந்தேன்! இதில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை? என்னை தான் நான் சொல்லி ஆக வேண்டும்!! 

அவள் என்ன தான் சுயநலம் கொண்டு என்னை ஒரு பொம்மை போல் பாவித்தாலும் எனக்குள் இருந்த அந்த மேல் ஷாவ்வனஸ்டிக் பிக் ஒரு பெண் உன்னை வேண்டாம் என்பதா என்ற போட்டி மனப்பான்மை என்னை பாதித்தது! அந்த போட்டி மனப்பான்மையில் அவளை பைத்தியமாக விரும்பினேன்! அவள் கணவனுடன் மனம் வேறுபட்டு இங்கு வந்ததது எனக்காக என்றென்னினேன். பிறகே தெரிந்தது நான் அவளுக்கு வெறும் ஒரு பேக் அப் ஆப்ஷன் என்று. 

அவள் என்னை தவிர்த்து மற்றவர்களுடன் கொண்ட காம உறவு என் வாழ்க்கை நிலையை மொத்தமாக மாற்றியது. அதுவரை ஒரு வெகுளியாய் ஒருவனுக்கு ஒருத்தி, பெண் என்றால் தெய்வம், காதல் என்றால் தெய்வீகம், காமம் காதலோடு வரவேண்டும் என்ற சினிமா கலந்த பொய்யோடு வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு முதல் முறை கோபம் வந்தது அதுவும் பெண்கள் மேல் பயங்கர கோபம் வந்தது. 

என் உணர்ச்சியை அவள் சுயநலத்திற்காக பயன் கொண்டு நகையாடுவதா? ஆம் என் உணர்வுகளை அவள் தோழி தோழர்களோடு என் பின்னே எள்ளி நகையாடினாள். கோபம் தலைக்கேறியது பெண் மேல் உள்ள மரியாதை சீதைந்து போனது. உடனே இதை படிக்கும் பெமினிஸ்ட் தோழிகள் கோபம் கொள்ள வேண்டாம் உங்கள் நினைப்பு எனக்கு புரிகிறது "ஏன்டா ஒரு பொண்ணு உன்கிட்ட பிரண்ட்ஸா பழகுனா உடனே லவ்ன்னு நினைக்க வேண்டியது அவ உன்னை நல்ல பிரண்டா தானே பாத்திருக்கா...." அவள் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி உங்கள் சந்தேகங்களை தீர்க்கும்  "நான் என் புருஷன டிவோர்ஸ் பண்ணிக்கிட்டு வந்தா என்னை கல்யாணம் பண்ணிப்பியா?" 

அன்று முதல் பெண் என்பவள் எனக்கு ஒரு போதை பொருளாக தெரிய ஆரம்பித்தாள். இன்றும் கூட அவளை நான் குறை கூற வில்லை, இருந்தும் இந்த நன் பயன் அவளையே சாரும் என்று தான் சொல்கிறேன். 

அதன் பிறகு நான் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தேன் யாரையும் என் காமப்பார்வையால் சீண்டவில்லை ஏனோ ஆசைகள் இருந்தாலும் யாரையும் ஏமாற்ற மனம் வரவில்லை. என் ஆசையை அவர்களிடம் தெரிவிப்பேன் அவர்களும் என்னை வண்டை வாண்டையாக திட்டி விட்டு சபித்து செல்வார்கள் இத்துணைக்கும் அவர்கள் தான் என்னை காதலிப்பதாக சொல்வார்கள் நானோ சிம்பிளாக "லெட்ஸ் பக் தென் வி வில் சி வேர் இட் கோஸ்" என்பேன். கோபம் தலைக்கேறி ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு செல்வார்கள். 

இந்த சந்தர்ப்பத்தில் தான் அவளை சந்தித்தேன் அவள் என்னை முற்றிலுமாக புரிந்து வைத்திருந்தாள், சொல்ல போனால் எனது செராக்ஸ் காப்பி என்று கூட சொல்லலாம். காதலால் ஏமாற்றப்பட்டு காமத்தை மனசார விரும்புபவள். அவளிடம் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தேன். ஒரு முறை சினிமா தியேட்டரில் சந்தித்து கொண்டோம். அன்று இருட்டில் நடந்த களேபரம் பிறகு வெளியே என்னை பைக்கில் வீட்டில் விடும் வரை தொடர்ந்தது. அன்று அவளை அழைத்துக்கொண்டு எனது வீட்டிற்கும் வந்து விட்டேன். எங்கள் உணர்ச்சிகள் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் எனக்கு தீடிரென்று ஞானோதயம் வந்தது. வேண்டாம் என்று அவளை தடுத்து நிறுத்தினேன்! ஒன்றும் புரியாமல்  அவள் முழித்துக்கொண்டிருக்க நான் என் காதலிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்றேன்!! அவளின் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது! அந்த ஏமாற்றம் வெறுப்பாக மரியாதை அவள் வண்டியை ஸ்டார்ட் செய்ய உதைத்த பொழுது உணர்ந்தேன்.

அவளுக்கு மாத இறுதியில் கல்யாணம் நடந்தது எனக்கோ அடுத்த வருடம் நடந்தது எங்கள் தொடர்பு மொத்தமாக துண்டித்து போனது!! 

மீண்டும் நான் அவளை பல வருடங்கள் கழித்து இன்ஸ்டகிராமில் சந்தித்தேன், அழகிய குடும்பம் தேவதை போல் குழந்தைகள் என்று சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். மீண்டும் மெசேஜ் செய்ய தொடங்கினோம்! எல்லைக்குள் சென்று கொண்டிருந்த எங்கள் உணர்வு எல்லை மீற தொடங்கியது. இந்த எல்லை மீறிய உறவில் ஒன்று மட்டும் மிக தெளிவாக இருந்தது, காதலிக்க கணவனும் மனைவியும் இருக்க காமத்திற்கு மட்டும் ஏங்கும் இரு உள்ளங்கள் என்று நான் எண்ணினேன். என் எண்ணம் வழக்கம் போல் தவறாகவே இருந்தது. 

அவள் என்னை காதலாகவும் காணவில்லை காமமாகவும் காணவில்லை பின் என்னிடத்தில் என்ன கண்டாள்? அவளுக்கே வெளிச்சம்! அவள் என் உணர்வுகளை கிளற செய்தாள் இருந்தும் அதை மறுநொடி மறந்தும் போனாள். பெண்ணின் வேறொரு பரிணாமம் தெரிந்தது! அவளிடம் நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன், அவளிடம் என்ன பேச வேண்டும் என்ன பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு இல்லாமல் என்னால் பேச முடிந்தது. இந்த சுதந்திரம் எனக்கு வேறெங்கும் கிடைக்கவில்லை அந்த சுதந்திரத்தில் நான் மயங்கி கிடந்தேன். என் மயக்க எல்லையில் அவளும் சேர்ந்துகொண்டாள் ஒரு முறை அவள் அவளை அறியாமலே என்னை வர்ணித்தாள் என் கனவில் ஊடுருவினாள். இது அவளுக்கு பயத்தை கொடுத்தது போலும், அந்த பயத்தில் அவள் என்னை விட்டு விலகலானாள். முதல் முறையாக அளவு கடந்த அன்பு, விஷமாக மாறியது போல உணர்ந்தேன். 

இன்றும் பலமுறை அவளுக்கு மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்று யோசிக்கும் பொழுது "நான் ஏன் அனுப்ப வேண்டும்? அவள் அனுப்பினால் தான் என்ன?" என்று உள்ளூர கேட்டுக்கொள்வேன். பலமுறை இதை பற்றி என் மனைவியின் கல்லறையின் முன் உட்கார்ந்து அவளிடம் பேசியும் உள்ளேன் அவளும் மௌனமாக என்னை பார்த்து சிரித்து "சரியான கிறுக்குபா நீ" என்று செல்லமாக கடிந்து கொள்வாள். 

இன்றோடு 40 ஆண்டுகள் கடந்து விட்டது, அவளை பற்றி நினைக்காத நாளில்லை! இன்றும் கூட இன்ஸ்டாகிராமில் அவளுக்கு மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்தேன் பிறகு அனுப்பித்தான் பார்ப்போமே என்று ஒரு வரி "ஹாய் ஹொவ் ஆர் யு" என்று டைப் செய்தேன் லேசாக எனது இடது பக்க கை வலித்தது அது நேரே சென்று எனது இருதயத்தை அடைத்தது மொபைல் போன் கை நழுவி கீழே விழுந்தது பின் எல்லாமும் இருட்டு மயமாகியது. 

கண் விழுத்து பார்த்தபொழுது என்னை ஒரு நர்ஸ் கொஞ்சி கொண்டிருந்தாள் சுற்றும் முற்றும் முகம் தெரியாத முகங்கள் என்னை சூழ்ந்துகொண்டிருந்தன. அதில் ஒருவள் என்னை தன் மார்போடு வாரியணைத்து கண்ணீர் மல்க என்னை பார்த்து "இவனுக்கு சித்தார்த்ன்னு பெயர் வைக்கலாம் " என்று சொல்ல எல்லோரும் அர்பறித்தனர். நான் திரும்பவும் சோர்வடைந்து பால் குடித்துக்கொண்டே தூங்கச்செல்கின்றேன்....

என் நினைவுகள் மங்குவதற்கு முன் இந்த கதையில் வரும் எல்லா அவளிடமும் முதலில் என் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கின்றேன்... நினைவு மங்கிற்று... முற்றம்.

சத்தியமாக நான் ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்டால்... எனக்கு தெரியாது? இது நான் கண்ட கனவுகளில் ஒன்று! ஏன் என் கனவுகளை நான் பதிவிடுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்!! ஆனால் நீங்கள் கேட்பதில்லை!! ஏன் கேட்பதில்லை? படித்தால் தானே கேட்பதற்கு!! 

 

சிவராஜ் பரமேஸ்வரன்.

Add Your Comments

Say Something

 

Comments

No comments.