அத்தியாயத்தில் ஒரு நாள்

By Admin - 18 Jun 2022 383 0

இன்று போல் அன்றும் தனது அறையில் கார்த்திக் தான் எழுதி கிறுக்கிய காகிதக் குவியலை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மீராவிற்கு போன் வருகின்றது. மீரா போனை எடுத்து அறையை விட்டு வெளியே சென்று,

"ஹலோ"
"ஹலோ மீரா சுமதி ஆண்ட்டி பேசுறேன் மா"
"ஹாய் ஆண்ட்டி!! what a surprise! எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன் மா! நீ எப்படி மா இருக்கே?"
"நான் நல்லா இருக்கேன் ஆண்ட்டி!! இப்போ எங்கே இருக்கீங்க? சேலமா? இல்ல திருச்சி போய்ட்டீங்களா?
"நான் சென்னைல இருக்கேன் மா!!"
"சென்னைலயா? அப்போ வீட்டுக்கு வாங்க ஆண்ட்டி!"
"இல்ல மா இன்னைக்கு நைட் நாங்க US போறோம், மகேஷ் அங்க தானே இருக்கான்! அங்கிளையும் என்னையும் அங்க வர சொன்னான்!!"
"வாவ் சூப்பர் ஆண்ட்டி கலக்குங்க! கலக்குங்க!"
"ஆமாம் கார்த்திக் எப்படி இருக்கான்?"
"நல்லா இருக்காரு ஆண்ட்டி!!"
"இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்?"
 
மீரா தடுமாறிக்கொண்டு,
 
"Feature film script work போயிட்டிருக்கு ஆண்ட்டி... இந்த வருஷம் அவர் ஜாதகம் சரியா இல்ல! அதுனால எதுவும் செட் ஆகல"
"இதையே தானே மா போன வருஷம் சொன்னே!"
"இல்ல ஆண்ட்டி அவரும் try பண்ணிட்டு தான் இருக்காரு! எதுவும் கிடைக்க மாட்டேங்குது!! அது மட்டும் இல்ல ஆண்ட்டி அவருக்கு உடம்பு வேற சரி இல்ல"
"நான் சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காதே! மகேஷ் கார்த்திக்க விட சின்ன பையன்! அவனே குழந்தை குட்டி சொந்த வீடுன்னு foreign-ல   செட்டில் ஆகிட்டான்! நீயும் எத்தனை நாள் தான் மா இப்படியே பொய் சொல்லிட்டு இருக்க போறே? நாலு காசு உழைச்சு சம்பாதிச்சா தான் மா உடம்புல ஒட்டும்! இப்படியே சும்மா  உட்கார்ந்து சாப்பிட்டா ஒட்டாது மா!!"
"ஆண்ட்டி!!!"
"இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன் சினிமாவும் லவ்வும் நம்ப குடும்பத்துக்கு வேணாம்ன்னு...எங்கே நீயும் கேக்கலே!! உங்க அம்மாவும் கேக்கல...இப்போ அனுபவிங்க!!"
 
மீரா கண்களில் குளம் போல் நிறைந்த கண்ணீர் அவள் கட்டுப்பாட்டை இழந்து உருண்டோடியது! கார்த்திக் அறையை விட்டு வெளியே வர! மீரா போனை துண்டித்து! முகத்தை திருப்பிக் கண்ணீரை துடைத்துக் கொண்டே,
 
"கார்த்திக்! சுமதி ஆண்ட்டி கால் பண்ணிருந்தாங்க! அவங்க US போறாங்களாம்! மகேஷ் friend ஒருத்தன் சினிமா producer ஆம்! அவன்கிட்ட உன்ன refer பண்ணிருக்கானாம்! அத சொல்லத் தான் கூப்பிட்டாங்க!!"
 
கார்த்திக் சிரித்துக்கொண்டே மீராவை கட்டியணைத்து,
 
"அடுத்த வாட்டி உன்னோட போன் ஸ்பீக்கர் volume-அ கொஞ்சம் கம்மியா வை! சரியா! எல்லாமே கேக்குதுடா!!"
 
என்று சொல்ல மீரா உடைந்து கார்த்திக்கின் மாரின் மீது சாய்ந்து தேம்பி அழுகின்றாள்…..!
 
மீராவை கட்டியணைத்தபடி,

மன்னிக்கவும்.....கதைக்குள் ஒரு நொடி நான் கார்த்திக் என்று நினைத்து விட்டேன்!!

அத்தியாயங்கள் தொடர்ந்துகொண்டிருக்க,
என்றும் போல் இன்று கிறுக்கியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.

Add Your Comments

Say Something

 

Comments

No comments.