அந்த ஐந்து நாட்கள் முடிவு
By Admin - 01 Jul 2021 856 0

சிரித்துக்கொண்டே கைபேசியை எடுத்து "ஹலோ" என்றேன் "என்ன டா எப்படி இருக்கே?" என்று பதில் வந்தது. அந்தக் குரல் என்னை ஒருநிமிடம் திணரச் செய்தது! திணறிக்கொண்டே "கீர்த்தனா?" என்றேன் "என்னடா நம்பர டெலீட் பண்ணிட்டியா என்ன?" நான் பதில் ஏதும் பேசாமல் இருந்தேன். குளிர் காற்றிலும் வேர்த்தது. "ஹலோ ஹலோ இருக்கியா?" என்று அவள் கேட்க தடுமாறி "இருக்கேன்!" என்றேன் "நான் இப்போ அங்க தான் வந்துட்டு இருக்கேன் பஸ்டாப்ல வந்து பிக் பண்றியா?" என்று அவள் கேட்க "நான் இப்போ பெங்களூர்ல இல்ல நான் ஊர்ல இருக்கேன்!" "தெரியும் டா ஐயர் மாமா உங்க அண்ணனுக்கு கல்யாணம்னு சொன்னாரு!! நான் இப்போ உங்க ஊருக்கு தான் வந்துட்டு இருக்கேன்! போன்ல பேட்டரி வேற லோ! இன்னும் ஒரு கால் மணிநேரத்துல ரீச் ஆகிடுவேன்....." என்று கூறிக்கொண்டிருக்க கால் கட் ஆகியது.
குழப்பத்துடன் மாடியிலிருந்து கீழே பார்க்க, நேஹா யாரிடமோ பேசிக்கொண்டு என்னை பார்த்து சிரித்தாள். நானும் கலக்கத்துடன் சிரித்தேன். என் சிரிப்பில் இருந்த தயக்கம் அவளுக்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தியது. அவள் வேகமாக மாடி நோக்கி வந்தாள். "என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கே?" என்று அவள் கேட்க தயக்கமாய் அவளிடம் "உண்மைய சொல்லனுமா இல்லே பொய்ய சொல்லனுமா?" என்று கேட்டேன் அதற்கு அவள் "உன்னால பொய்ய சொல்லி சமாளிக்க முடியுமா?" சிரித்துக்கொண்டு "முடியாது" என்றேன் "அப்புறம் எதுக்கு?" ஒரு புது தெளிவோடு நான், "கீர்த்தனா கால் பண்ணா!" எந்த ஒரு அதிர்ச்சியும் ஆச்சரியமும் இல்லாமல் "சரி அதுக்கு?" என்று அவள் அப்பாவியாய் கேட்க "அவ இங்க நேரே என்ன பார்க்க வராளாம்" மீண்டும் அதே அப்பாவித்தனத்தோடு "சோ வாட்?" அவளின் இந்த உணர்ச்சி என்னை தடுமாற செய்தது கடுப்பில் எதுவும் பேசாமல் கையை கட்டிக்கொண்டு அவளையே பார்த்தேன். "சிவா, நீ சின்ன பையன் கிடையாது! அவ வரட்டும்! உன்ன பார்க்கட்டும்! நீங்க பேசுங்க! கண்டிப்பா ஒரு புரிதல் வரும்! நான் உன்ன நம்புறேன்! உன்ன காதலிக்குறேன்! நீயும் என்னை காதலிக்குறே! வாட் மோர் கேன் ஹாப்பெண்? ஐ தோட் சம்திங் வாஸ் சீரியஸ்!!" என்று அவள் சாதாரணமாக கூற நான் நிதானமானேன். அவளிடம் இருந்த தெளிவு என்னிடம் ஏன் இல்லை என்ற ஒரு சின்ன வருத்தம் என்னை உறுத்தியது. கடைசியாக "நீ தனியா போகாத நானும் வரேன்!" என்று அவள் சொல்ல இனம் புரியாத ஒரு தைரியம் வந்தது.
நானும் அவளும் கார் எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு சென்றோம். பெங்களூரிலிருந்து எங்கள் ஊரான காஞ்சிபுரத்திற்கு பஸ் வந்தது. நேஹா ஒரு ஓரமாக காரை நிறுத்த நான் இறங்கி பஸ்ஸை நோக்கி நடந்தேன். ஒருவர் ஒருவராய் இறங்க என் கண்கள் படபடக்க தொடங்கியது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது. எனக்குள் அவளை காணும் ஏக்கம் அதிகரித்தது. அவளை காணாமல் கண்கள் அலைந்து கொண்டிருந்தது. பஸ்ஸின் ஜன்னலை பார்த்தேன். அவள் தென்படுகின்றாளா என்ற என் தேடலை பின்னாலிருந்து நேஹா கவனித்துக் கொண்டிருந்தாள். என் அருகில் வந்து நிற்க நான் சற்று நிதானத்திற்கு வந்தேன். அவள் கண்களில் ஒரு பொறாமையை கண்டேன். அவள் அதை வெளிகாட்டமால் "போன் போட்டு பாரு!" என்று சொல்ல, எனக்குள் சிரிப்புடன் கைபேசியை எடுத்து அவளுக்கு டயல் செய்ய, பின்னாலிருந்து,
"நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே..."
என்ற பாட்டு கைபேசி ஒலியாக ஒலிக்க, நாங்கள் திரும்பினோம்! ஒரு 80 வயதான பாட்டி தன் பொக்கை வாய் வைத்து சிரித்துக் கொண்டு கைபேசியை எடுத்து "டேவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன், டூ மினிட்ஸ்ல ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்துடுவேன்! டோன்ட் வொரி!!" என்று கூறி சிரித்தவாறு கைபேசியை அணைத்தாள். நாங்கள் கவனிப்பதைக் கண்டு "சில்லி புருஷன் ஆல்வேஸ் வொரிடு அபௌட் மீ!!" என்று கூறி எங்களை பார்த்து சிரித்துக்கொண்டு சென்றாள்.
அப்பொழுது பின்னாலிருந்து ஒருவர் தட்ட நான் திரும்பினேன் "கொஞ்சம் ஓரமாய் வேடிக்கை பாருங்க சார்! இப்படி நடுவுல நின்னுட்டா நாங்க இப்படி லகேஜ் இறக்குறது?" என்று காட்டமாய் கூற நாங்கள் இருவரும் பஸ் ஸ்டாண்டில் உள்ள டீ கடை பக்கம் போய் நின்றோம்.
டீ கடைகாரரிடம் பெங்களூர் பஸ் பற்றி விசாரித்தேன். எல்லா பஸ்சும் வந்து விட்டது என்று கூற நாங்கள் இருவரும் அரை மணி நேரம் அங்கே நின்றோம். அவள் வரவில்லை, கைபேசியை தொடர்பு கொண்டோம் கைபேசி சுவிட்ச் ஆப் என்றே வந்தது! இது அவளின் ஏதோ விளையாட்டோ என்றெண்ணி நாங்கள் திரும்பவும் வீட்டிற்கு புறப்பட்டோம்.
காரில் வரும் பொழுது நேஹா எதுவும் பேசாமல் வந்தாள். நானும் குழப்பத்தில் "எதுக்கு போன் பண்ணா? ஏன் இப்படி பண்றா! ச்சை!" என்று யோசித்துக்கொண்டு டேஷ் போர்டை தட்டினேன். நேஹா அதை கண்டும் காணாதது போல் வண்டியை ஓட்டினாள். பாவம் அவளுக்கு எவ்வளவு எரிச்சல் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது! அவள் இடத்தில் நானிருந்தால் துடி துடித்து போயிருப்பேன்! அவளாகியதால் நான் பிழைத்தேன்!
வீடு வந்து சேர்ந்தோம், அங்கே கீர்த்தனா அம்மாவிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்! அவளைக் கண்டு நாங்கள் இருவரும் ஆச்சரியப்பட்டோம். ரூடோ அவளிடம் தன் பாசத்தை காட்டிக்கொண்டிருந்தான். அவள் ரூடோவை கொஞ்சிக்கொண்டிருக்க அவளின் வயிற்றை பார்த்தேன். வயிறு தள்ளி எழுமாதம் கர்பமாக இருந்தாள் அருகில் அவள் கணவன் தினேஷ் அமர்ந்திருந்தான். எங்களை கண்டதும் கீர்த்தனா குதூகலித்து வேகமாக கை அசைத்து எழுந்து நிற்க தினேஷும் எழுந்தான். என்னிடம் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தான். நேஹாவை கீர்த்தனா கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தாள். என் உள்ளம் குதூகலித்தது. என் கையை பிடித்து இழுத்து நேஹாவிடம் "5 மினிட்ஸ், கொஞ்சம் தனியா பேசணும்!" என்று கூறி என்னை அழைத்துக்கொண்டு மாடி நோக்கி என்னை இழுத்து சென்றாள். நேஹா செய்வதறியாது என்னை பார்த்துக் கொண்டிருக்க தினேஷ் "ரொம்ப நாள் கழிச்சு மீட் பன்றாங்கல அது தான் ஏதோ ரகசியம் பேச கூட்டிகிட்டு போறா!!" நேஹா தினேஷை பரிதாபமாக பார்த்தாள்.
மாடியில் அவள் ஏறி வரும் வரை என் கையை அவள் பற்றிக்கொண்டிருந்தாள். மாடி படி ஏறியவுடன் மூச்சிரைத்தாள்! அவளை அங்குள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் அமரவைத்தேன். தனது பையிலிருந்து தண்ணிர் எடுத்து குடித்தாள் நிதானத்திற்கு வந்தாள். எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். கீர்த்தனா என்னை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள். நான் ஏதோ குற்றம் செய்தவன் போல் என்னை பார்த்தாள். என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். "பரவா இல்லையே வேறொரு பொண்ண உஷார் பண்ணிட்டே! எப்படி டா நீயா போய் தொங்குனியா? இல்லே அவளா வந்தாளா?" அவள் எரிச்சலுடன் கூற எனக்கு கோபம் வந்தது "இப்போ எதுக்கு வந்தே?" என்று நான் சீற "ஓஹோ இப்போ என்ன பாக்குறதே சாருக்கு புடிக்காம போச்சு போல" என்று வெறுப்பு தொனியில் அவள் பேச "உனக்கு அரிப்பு வந்தா சொரிய நான் என்ன தொரட்டியா?" என்று நான் சாட அவள் பேசாமல் இருந்தாள். "உன் இஷ்டத்துக்கு வருவே போவே! கேட்டா தினேஷ்க்கு கீப் இருக்கு! அப்பா ஹார்ட் பேஷியன்ட்! அம்மாக்கு பிரஷர்! இதுக்கெல்லாம் நான் ஊர்க்கா அப்படித்தானே!" அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். "சரி இப்போ எதுக்கு வந்தே?" என்று நான் கேட்க அவள் கண் கலங்கினாள். அவள் கண்கள் குளமாக என் இதயம் கனத்தது, வெறுப்பை கொட்டினாலும் அவளை வெறுக்க முடியவில்லை. அவள் மடிமீது தலை வைத்து தரையில் மண்டியிட்டு அவளிடம் "ஏன் இப்படி பண்றே? நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்? ஏன் நீ என்ன விடமாட்டேங்குறே?" என்று கேட்க, அவள் என் தலை கோதி விட்டு "இனி நான் உன்ன உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன்! ரெண்டு மாசத்துல டெலிவரி சொல்லி இருக்காங்க! அதுக்கு முன்ன உன்ன பார்த்துட்டு போலாம்ன்னு தான் வந்தேன்! வந்த இடத்துலே பஸ்ல உங்க சொந்தக்காரங்கல பார்த்தேன் அவங்கதான் வீட்டுக்கு கூப்பிட்டு வந்தாங்க! உனக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சப்போ ஏதோ ஒரு புரியாத கோபம்! அது தான் அப்படி கத்தினேன்! சாரி டா!" என்று அவள் கூற என் மனம் கலங்கியது. "அப்புறம் ஏன் அன்னைக்கு என் கிட்ட பேசாம போனே?" என்று நான் கேட்க "வழக்கம் போல அப்பா சாக போறேன் நின்னாரு! அம்மா விஷம் குடிக்க போறேன்னு மிரட்டுனா! உயர்குடி சாபம்! நான் என்ன செய்ய? நான் பெருசா, நீ பெருசா, குடும்ப மானம் பெருசான்னு கேட்டா! நான் என்னன்னு சொல்லறது! நான் செத்தா கூட பரவா இல்லை ஆனா கிழ் ஜாதி..." என்று அவள் சொல்லமுடியாமல் தொண்டை அடைத்து தடுமாறினாள். நான் எதுவும் பேசாமல் அவள் மடியில் கண்களை மூடி படுத்தேன்.
பந்தியில் கீர்த்தனா சாப்பிட உட்கார, அவளுக்கும் தினேஷிற்கும் சாப்பாடு பரிமாற பட்டது. நேஹா கீர்த்தனாவை நன்றாக உபசரித்தாள். அம்மா அவளுக்கு வேண்டிய தின் பண்டங்களை பொட்டலம் கட்டினாள். எல்லாம் ஒரு பெரிய துணி பையில் போட்டு தினேஷிடம் கொடுக்கப்பட்டது. தினேஷும் அதை வாங்கி காரில் வைத்தான். கீர்த்தனா அம்மாவிடமும் நேஹாவிடமும் பேசிக்கொண்டிருக்க தினேஷ் என்னிடம் வந்து "உங்களை எங்கயோ பார்த்த ஞாபகம் எங்கேன்னு தான் தெரியலே!!" நான் சிரித்துக்கொண்டே "தெரியலை! நான் இன்னைக்கு தான் உங்கள முதல் தடவை மீட் பண்றேன்!!" "கல்யாணத்துக்கு வரலியா" என்று தினேஷ் கேட்க "இல்ல நான் அப்போ ஒரு ப்ராஜெக்ட் வேலையா வெளியூர் போயிருந்தேன்!" அதற்க்குள் கீர்த்தனா அருகில் வந்து என்னை தனியே அழைத்து "சரி நான் கிளம்புறேன்!" என்று சொல்ல "கல்யாணம் முடிஞ்சு போலாம்ல" என்று கேட்க "இல்ல டா டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் இருக்கு, செக் அப் இருக்கு, போய் ஆகணும்! சோ விஷ் யு எ ஹாப்பி மாரீடு லைப்" "தேங்க்ஸ்" என்று கூற அவள் என்னை கட்டி அனைத்து என் காதோரமாக "என் வயத்துல வளர குழந்தைக்கு நீ தான் அப்பா, அதுக்கும் சேர்த்து கங்கிராட்ஸ் மை டியர் லவ்" என்று கூறி என்னை பார்த்து சிரித்துக்கொண்டு விலகிச் சென்று எல்லோருக்கும் விடை கூறி காரில் ஏறினாள். நான் உறைந்து போய் நிற்க, தினேஷ் எனக்கு டாடா காட்டி செல்ல, கீர்த்தனா காரின் பின் கதவின் கருப்பு கண்ணாடியை மெல்ல ஏற்றி மூடினாள். அவளின் முகத்தில் உள்ள உணர்வு என்னை சுட்டெரித்தது.
நேஹா ஓடி வந்து என்னருகில் நின்றாள். கார் போன திசையை நோக்கி நான் நிற்க. நேஹா "நான் எக்ஸ்பெக்ட் பண்ணத விட கீர்த்தனா சீம்ஸ் டு பி நைஸ்" என்று அவள் சொல்ல நான் என்ன பதில் சொல்ல என்று யோசித்துக் கொண்டிருக்க மழை ஜோவென்று பெய்யத் தொடங்கியது. நேஹா வீட்டிற்குள் ஓடி செல்ல எல்லோரும் மழைக்கு ஒதுங்க, ரூடோ எங்கிருந்தோ ஓடி வந்து என் அருகில் நின்று என்னை பார்த்துக் குரைத்துக்கொண்டிருந்தான். நானும் அவனும் காரை சென்ற திசையை பார்த்து நனைந்து கொண்டு நின்றோம்.
கீர்த்தனாவின் உணர்வுகளின் பொருள் அந்த கடவுளுக்கு கூட புலப்படுமோ என்னமோ? இது சமுதாய கலாச்சாரத்தின் புலப்படாத பொருள்! ஒருவரது உணர்வு கூட அந்த ஒருவருக்கு உரியது அல்ல! அந்த உணர்வு கூட கலாச்சார பொதுவுடைமையே! கீர்த்தனா ஒரு பெண்ணாய் பிறந்த பாவத்திற்கு பழிதீர்க்கின்றாளோ? அவள் யாரை பழி தீர்க்கின்றாள்? என்னையா? அல்லது தன் குடும்பத்தையா? அவளுக்கே வெளிச்சம்! பழி ஏதுவாயினும்! உயர்குடியில் ஒரு கீழ் குடியின் பரம்பரை விழுதாக நான்....அசுர உதிரம் உதிர்ந்தது....
காமம் காதல் அன்பு கடந்த அந்த ஐந்து நாட்கள்...
முற்றும்.
இந்த பொய்க் கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.
All my stories are legally registered with Screen Writers Association - SWA. For further queries mail me at contact@padmajaamedia.com
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
16 Oct 2020
The Indian Affair
The Indian affair is always termed sexual. It’s ugly and it has a culture discrimination. It's not about two individuals. It is always about two famil...
18 May 2021
அறியா அடிமை...
இருட்டில் வெளிச்சமாய் கண்கள் தெரிய அந்த வெளிச்சம் கொண்டு ஈரம் படிந்த உதடுகளை மின்மினியென காணகண்ட அந்த மின்மினி இதழ்களை சுவைத்...
18 Jul 2021
NEET பரிதாபங்கள் ...
Jobless Guy: சார் NEET கட்டாயம் தேவையா?Active Politician: என்ன கேள்வி தம்பி இது? NEET கட்டாயம் தேவை தம்பி! தகுதியான பாரபட்சம் இல்லாம தகுதியான மாணவர்கள...