நான் ராமனாக மாறிய தருணம்

By Admin - 19 May 2021 789 0

இராவணனாக பிறந்த நான் ராமனாக மாறிய தருணம்...

இந்த சமுதாயத்தில் ராமனாக வலம் வரும் நான், இராவணனாக ஆசைப்படுவது ஏனோ?

வில்வித்தையில் வல்லவனாக, குணத்தில் குணசீலனாக, ஏகபத்தினி மாறனாக உயர்குடியில் இருக்கும் ராமனை விட இசையில் வல்லவனாக, ருத்ரவீணையால் சிவனை கவர்ந்தவனாக, அறிவியல் வளர்த்து மக்களை சமமாக நடத்தி மக்களின் மன்னனாக இராவணனாக மனம் ஆசைப்படுவது ஏனோ?

தன் மனையாளைத் தூக்கிச் சென்ற அரக்கனை வதம் செய்ய வானரக்குடி தலைவனை யுத்த நெறிமுறை மறந்து, மறைத்து, அதர்மத்தால் வதம் செய்து தர்மத்தை நிலை நாட்டும் ராமனை விட தன் தங்கையின் மூக்கை அறுத்து ஒரு பெண் என்றும் பாராமல் அவமதித்து அவளின்பால் பழி தீர்க்க ஒரு பாடம் கற்பிக்க மாற்றான் மனைவியைக் கடத்தி தீராப் பழிக்கு ஆளான இராவணனாக மனம் ஆசைப்படுவது ஏனோ?

தன் மனையை காக்கும் போரில் தன் இளையவன் இலக்குவன், மேகநாதனால் போர் புண் ஏற்று மண்ணில் சரிந்து விழுந்த பொழுது மனிதம் கருதி போரை நிறுத்திவைத்த இராவணனாக மனம் ஆசைப்படுவது ஏனோ?

விபீடணன் துரோகத்தால் போரை வென்று ஓர் இனத்தையே அழித்து பொதுமக்களை கொன்றுகுவித்து, பல பெண்களின் தாலிகளை அறுத்து வென்ற மனையாளை அக்னிப்பிரவேசம் செய்து சுத்திகரிக்கச் சொன்ன ராமபிரானை ஏனோ மனம் ஈர்க்கவில்லை!

வர்ணம் வகையை எதிர்த்து, பிறப்பால் வரும் சலுகையை எதிர்த்து மக்களை வேறுபடுத்திப் பார்க்காமல்  பார்த்துக்கொண்ட இராவணனாகிய மனிதனை வெறுக்க முடியவில்லை!

ராமபிரான் யாகம் வளர்த்து வணங்கிய தேவனாகிய இந்திரதேவன் செய்யாத தவறையா மனிதனாகிய இராவணனன் செய்துவிட்டான்? 

பிரம்மரிஷி ஒருவரது மனையின் மீது மோகம் கொண்டு பிரம்மரிஷி போல் வேடமணிந்து அவரது மனையாளை இச்சை தீர்த்த இந்திரதேவனை தலைவணங்கிய ராமபிரானான கடவுளை ஏனோ மனம் ஈர்க்கவில்லை!

மாற்றான் மனையை அவள் விருப்பின்றி கொண்டுவந்தது தவறே, தங்கை பாசம், பழி தீர்க்கும் மூர்க்க குணம், சிவனின் அருள் இதில் அதீதமான நேர்மை குலநாசத்திற்கு வித்திட்டது. இந்த பயமே என்னை ராமனாக வாழவைக்கின்றது

தவறே செய்தாலும் ராமன் கடவுளே! சரியே செய்தாலும் இராவணன் அரக்கனே!

இப்படிக்கு,
இராவணனாக வாழ விரும்பும் ராமன்.

கூடவே,
சிவராஜ் பரமேஸ்வரன். 


Add Your Comments

Say Something

 

Comments

No comments.