கொரோனா பயம்
By Admin - 20 May 2021 752 0

நண்பர் ஒருவரது குடும்பம் நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 2020 முதல் இந்நாள் வரையில் வெளி உலகம் பார்த்ததில்லை. சரி அவர்கள் ஏதோ காரணம் கொண்டு நோய்த்தொற்றுலிருந்து தப்பிப்பிழைக்க இந்த முடிவை எடுத்தது புரிகின்றது ஆனால் அவர்கள் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்களோ இன்று வரை வீடே கதி என்று கிடக்கிறார்கள். பயத்தின் உச்சம், வெளியிலிருந்து வரும் பொருட்கள் சராசரியாக இரண்டு வாரம் வெயிலில் காயும், காய்ந்த அந்த பொருட்கள் பின்னர் நவ மூலிகை தண்ணீரில் முக்கப்படும், பின்னர் சோப்பு தண்ணீரில் அபிஷேகம். கொரோனா வைரஸ் செத்ததோ இல்லையா பொருட்கள் செத்துவிடும். தரையை பெருக்கும் துடைப்பமும் விதிவிலக்கல்ல!!
இதை கைபேசியில் நண்பன் சொல்லிகொண்டே இருக்க என் வீட்டின் எதிர் புறம் உள்ள சாலையோரமாக காய் கனிகளை விற்கும் ஒரு அம்மா தனது பேரக்குழந்தியுடன் விளையாடுவதை பார்த்தேன். சற்றே விசித்திரமாகி போனது எனது சிந்தனை. அந்த 2 வயதிர்க்கும் குறைவான சிறு குழந்தை துறு துறுவென இங்க அங்கே ஓடுவதும். தெருவில் இருக்கும் நாய் குட்டியின் காதை செல்லமாக வருடுவதும். கூட தனது பாட்டியை அதட்டுவதும். அந்த நாய் குட்டிக்கு தனது தின்பண்டத்தில் சிலவற்றை கொடுத்து அதே கைக்கொண்டு தானும் உண்ணுவதும். அவன் விளையாட்டை பார்த்துக்கொண்டே, நண்பன் கதையை கேட்டுக்கொண்டே இருந்த எனது கொரோனா பயம் குழம்பித்தான் போனது!
மேலும் குழப்பும் விதத்தில் எங்கள் ஏரியா பிச்சைக்காரர் அங்கு வந்தார், குப்பை தொட்டியில் தனது உணவை தேடிக்கொண்டு இருந்தார். அங்கே வந்த போலீஸ்காரர் ஒருவர் கருணை கொண்டு தன்னிடம் இருந்த சாப்பாட்டு பொதியை பிச்சைக்காரரிடம் கொடுத்து உண்ண சொன்னார். குழந்தை அவரை பார்த்து சிரித்தது, போலீஸ்காரர் "ஏம்மா குழந்தையை வச்சுக்கிட்டு இங்க என்ன பண்றே! வீட்டுக்கு போக வேண்டியது தானே" என்று கரிசனையோடு அதட்ட "எங்களுக்கு ஏது சார் வீடு? இங்க தானே சார் இத்தனை வருசமா இருக்கேன்! இப்போ எங்கே போவேன்" என்று பதில் கூற தலையில் அடித்து கொண்டு போலீஸ்காரர் தனது மோட்டார் வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டுயிருந்தார். "மாமா பாரு மாமா பைக் பாரு" என்று அந்த பாட்டி பேரனுக்கு சோறு ஊட்டி கொண்டுயிருந்தாள்.
இதை பார்த்துக்கொண்டே எனது பக்கத்து வீட்டு நண்பர், வாயில் சிகரெட்டை வைத்தவாறு என்னிடம் வந்து "பார்த்திங்களா அந்த பிச்சைக்காரனை, என்னமா இம்முனிட்டி பவர் வச்சு இருக்கான். எந்த போஷாக்கும் சாப்பிடாம இவனுக்கு எப்படி இந்த இம்முனிட்டி பவர் வந்துச்சுன்னு ரிசெர்ச் பண்ணாம, அத்த சாப்பிடு இத்த சாப்பிடுன்னு" என்று என்னை பார்த்து கூற. நான் போனில் ஒருவரோடு பேசிகொண்டுயிருக்கிறேன் என்று சைகையில் சொல்ல "ஓ ஓகே" என்று சொல்லி திரும்பவும் ஆரம்பித்தார் "நியாய படி பார்த்தா அவன் இரத்தத்தில் தானே எதிர்ப்பு சக்தி இருக்கு, அதைத்தானே! நமக்கு எதிர்ப்பு சக்தியா கொடுத்து இருக்கணும்" என்று ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை கூறினார். கொஞ்சம் தலைசுற்றத்தான் செய்தது. நான் நிதானத்திற்கு வர முயற்சி செய்யும் பொழுது, அவரது மனைவி தொலைவிலிருந்து அதட்டலாக அவரை கூப்பிட "மாவாட்ட கூப்பிடுறா, போயிட்டு 5 மினிட்ஸ்ல வந்துடுறேன்" என்று கண் செமிட்டி "தோ வந்துட்டேன் மா" என்று கூறியவாறு லுங்கியை வீராப்பாய் மடித்துக்கொண்டு சிகரெட் துண்டை வீசி எறிந்து மனைவியை நோக்கி சென்றார்.
எதிர் முனையில் நண்பன் பேசிக்கொண்டே இருக்க கைபேசியின் பேட்டரி தீர்ந்தது, கைபேசி சுவிட்ச் ஆப் ஆகியது. அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டு நின்றேன் "விழித்திரு தனித்திரு விலகியிரு" என்று அரசாங்க பணிக்கான ஆட்டோ ஒன்று மக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டே சென்றது. நான் பயந்துகொண்டே வீட்டிற்குள் சென்றேன்.
பயந்துகொண்டே,
நான்
கூடவே,
சிவராஜ் பரமேஸ்வரன்
இது வெறும் ஒரு கற்பனை கதையே, இதில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே. இது யாரையேனும் ஒத்துப்போய் இருந்தால் அது வெறும் தற்செயலே! தயை கூர்ந்து என்னை நம்புங்கள்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
28 Jul 2021
காமத்துப்பால் ...
நரேன் வெள்ளிக்கிழமை காலையில் இன்டெர்வியூக்கு புறப்பட சட்டையை தேடி கொண்டிருந்தான். தேடித் தேடி காலர் கொஞ்சம் கிழிந்த வெள்ளை மங்கிய மஞ்சள் சட்டையும், கர...
11 Oct 2021
Billie Jean - பில்லி ஜீன்...
கிழக்கு கடற்கரை சாலை 11 அக்டோபர் 2021மைக்கேல் ஜாக்சனின் "பில்லி ஜீன்" என்ற பாடலை ஹெட்செட்டில் கேட்டுக்கொண்டே தாரா புல்லட் ஓட்ட, பின் இருக்கையில் அவளை ...
13 Jun 2021
ஒரு மொட்டை மாடி கதை - கடைசி அத...
அத்தியாயம் 3 படிக்க இங்கு click செய்யவும் பாட்டி டொக்.... டொக்.... என்று கை தடியை தட்டி கொண்டு வர, பாட்டியை கண்ட பதற்றத்தில் என்னை அறியாமல்...